"சதாவதானி" செய்குத் தம்பிப் பாவலரின் செந்தமிழ்க் கொடை!

0 மறுமொழிகள்
"ஓரும் அவதானம் ஒருநூறும் செய்திந்தப்
பாரில் புகழ்படைத்த பண்டிதன் - சீரிய
செந்தமிழ்ச் செல்வன் செய்குத் தம்பிப் பாவல!"

எனக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாவலரின் பைந்தமிழ்த் திறன் பற்றிப் பாடினார்.

"வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யானொருவன் அன்றோ!" என்ற இராமலிங்க அடிகளாரின் வாக்கிற்கு இணங்க குடும்பம், உறவு, சாதி, சமயம் கடந்த ஞானியர் பரம்பரையில் தோன்றிய பாவலர், நாஞ்சில் நாட்டின் இடலாக்குடி என்னும் ஊரில் பக்கீர்மீறான் ஆமீனா தம்பதியர்க்கு மூன்றாம் மகனாக 1874, ஜூலை 31-ல் பிறந்தார்.

"தொட்டனைத்தூறும் மணற்கேணி," என்பதற்கொப்ப அவரின் உள்ளத்தில் தமிழுணர்வு ஊற்றெடுத்தது. சங்கரநாராயண அண்ணாவியார் என்பவரிடம் முறையாகத் தமிழ் பயின்ற பாவலர், இலக்கண-இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். அந்நாளில் இராமலிங்க அடிகளாரின் அருட்பாவை ஒரு பிரிவினர் மருட்பா எனக் கூறிவந்தனர். இதனை அறிந்த பாவலர் அருட்பா சார்பில் வாதிடுவதற்கு முன் வந்தார். அதற்கான கூட்டம் சென்னையில் ஏற்பாடாயிற்று. அக்கூட்டத்தில் தொடக்கமாக,

"சாதிகுலம் சமயமெல்லாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித் தனித்ததிரு வமுதளித்த தணித் தலைமைப் பொருளே,
ஆதிநடு கடைகாட்டா அகண்ட பகிரண்ட ஆருயிர்கள் அகம்புறம் மற்றனைத்து நின்ற மொழியே,
ஓதியுணர்ந்தவரெல்லாம் எனைக் கேட்க எனைத்தான் ஓதாமலுணர்ந் துணர்வாம் உருவுறச் செய்யுறவே,
ஜோதிமயமாய் விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
தூயநடத் தரசேயென் சொல்லு மணிந்தருளே!"

இப்பாடலை முழங்கினார். கேட்ட அவையோர் இவருடைய சமய நல்லிணக்கப் பாங்கை உணர்ந்து கையொலி எழுப்பி மகிழ்ந்தனர். தொடர்ந்து பல அரங்குகளில் தமது வாதத் திறமையால் "அருட்பா அருட்பாவே" என்று நிறுவினார்.



த.மு.சா. காஜா முகைதீன்


மரபுப் பாவளம் மிக்க பாவலர் சிலேடை பாடுவதில் சிறப்பாகத் திகழ்ந்தார். தமிழறிஞர் ஒருவர் ஒருமுறை, அவரைச் சிலேடையாகக் கடவுள் வணக்கம் பாடும்படி வேண்டினார். அப்பொழுது,

"சிரமாறுடையான் செழுமா வடியைத்,
திரமா நினைவார் சிரமே பணிவார்,
பரமா தரவா பருகாருருகார்,
வரமா தவமே மலிவார் பொலிவார்."

என்னும் பாடலைப்பாடி,
சிரம் ஆறுடையான் - சிரத்தில் கங்கையாற்றை உடைய சிவபெருமான்,
சிரம்மாறு உடையான் - இயல்புக்கு மாறுபட்ட சிரத்தை உடைய கணபதி,
சிரம் ஆறுடையான் - ஆறுதலைகளை உடைய முருகன்,
சிரம் "ஆறு" உடையான் - திருவரங்கத்தில் தலைப்பாகம் காவிரியாறு ஓட பள்ளிகொண்ட திருமால்,
சிரம் ஆறு உடையான் - தலையாய நல்வழிகளை உலகிற்குக் காட்டும் அல்லாஹ்
என ஐம்பொருளைச் சிலேடையால் விளக்கினார். இக்கவிச் சுவையில் "ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ," என்ற திருவாசகத் தேனையும், "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்ற திருமந்திரச் சத்தையும் பருகத் தந்த பாவலரின் நுட்பம் பாராட்டத்தக்கதன்றோ!

அவருடைய நினைவாற்றல் நினைந்து நினைந்து போற்றத்தக்கது. ஒருமுறை மதுரைச் தமிழ்ச் சங்க நிறுவனர் பாண்டித்துரை தேவர், தமிழ் விருந்துண்டு மகிழ கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
சைவ நூல் ஆய்வாளர் சுப்பிரமணிய ஐயர்,
இலக்கணப் பேராசிரியர் நாராயண ஐயங்கார்,
கந்தசாமிக் கவிராயர்
ஆகியோர் தமிழமுது பரிமாறிக் கொண்டிருந்தனர். அங்குப் பாவலரும் வருகை தந்து அமர்ந்தார்.

பாவலரின் நினைவுக் கலையின் பரிசோதனைக் களமாக அந்த அவை மாறியது. ஆய்வாளர் சுப்பிரமணிய ஐயர் ஏதேனும் புராண நூலில் ஏழுமுறை "நோக்க" என்ற சொல் வந்துள்ள பாடல் ஒன்றைக் கூறுங்கள் எனக் கேட்க, பாவலர்,

"கரத்தை நோக்குவர், வாளினை நோக்குவர்,
கடுப்பின் கருத்தை நோக்குவர், வீரத்தை நோக்குவர்,
எதிராத் தரத்தை நோக்குவர், அவையினில் அபுஜகில் - உடனே
உரைத்த வார்த்தையை நோக்குவர், நோக்குவர் உள்ளத்தை."
என்ற சீறாப்புராணப் பாடலைப் பாடிக்காட்டினார்.

தமிழ் கூறும் நல்லுலகுக்கு அவர் தந்த இலக்கியச் செல்வங்கள் மரபுப் பாவளம் மலிந்தவை. "முன்னோர் மொழி பொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்," என்பதற்கு எடுத்துக்காட்டானவை.

நபிகள்நாயக மான்மிய மஞ்சரி,
கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை,
திருக்கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி,
திருநாகூர் திரிபந்தாதி,
நீதிவெண்பா,
சம்சுதாசீன் கோவை, மற்றும்
தனிப்பாடல் திரட்டு
முதலியவை அவர் தந்த நூல்களுள் குறிப்பிடத்தக்கவை.

பாவலர் சொல்லிலும் செயலிலும் நீதிவழுவா விழுமிய நோக்கம் கொண்டவர். அறிஞர் அவையிலும், மாணவர் மத்தியிலும் நீதிகளை உணர்த்தி வந்தார். அந்த நீதிகளே அவரிடம் வெண்பாக்களாக மலர்ந்தன.
அறியாமையை அகற்றுவது கல்வி;
அறிவை நன்நெறிக்குத் திருத்துவது கல்வி;
இறையருளைப் பெருக்கி ஆன்மிக இன்பத்தை அளிப்பது கல்வி,
அதனை,

"அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை யகற்றி மதிக்கும் தெருளை
அகற்றுவதும் ஆவிக்கருந்துணை யாயின்பம்,
பொருத்துவதும் கல்வியென்றே போற்று."என்பதும்,

திருவள்ளுவர் கூறிய
கூடாஒழுக்கம்,
கூடாநட்பு,
சிற்றினம் சேராமை
என்ற சீரிய நன்நெறியை,

"கூடாரைக் கூடற்க, கூடிற் குறித்தவலாம்,
நாடாதெரிந் தேனும் நட்பொழிக -ஆடுமயில்
பச்சோந்தி பாற்படா பட்டால் மணிவிழிகள்
அச்சோ அழிந்தொழியு மால்."
என்பதும் அவர் நீதிவெண்பாவில் குறிப்பிடத்தக்கன. அவர் எழுதிய "சீட்டுக் கவிகள்" இலக்கியத்தரம் வாய்ந்தவை. பாவலர் சென்னையில் தங்கி இருந்தபொழுது, கோட்டாற்றிலிருந்து தம் நண்பர் பாக்கியம் பண்டாரம் என்பவருக்கு விடுத்த சீட்டுக் கவியில்,


"ஆகஞ் சுகமா? அடுத்தவர்கள் சேமமா?
மேகம் வழங்கியதா? மேலுமிந்தப்-போகம்
விளையுமா? இன்னுமழை வேண்டுமா? செல்வம் விளையுமா? ஊர்செழிக்கு மா?"

என்று பாவலர் தமது பொதுநல விழைவை வெளிப்படுத்தியுள்ளார்.

மாணவர்கள் தம்போல் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் ஆர்வமுள்ள பாவலர், தம் முன்னாள் மாணவர் ஒருவருக்கு எழுதிய சீட்டுக்கவி இது:

"கற்றுவரும் பெரும்தொழிலைக் கனவிடையும்
மறவாமல் கருத்தும் கொண்டு
முற்றுறவே ஆய்ந்துணர்ந்து முடித்த வந்நூல்
ஏது, இனிநீ முடிக்கப் போகும்
கொற்றமுறு நூலேது? மேல்விளங்கு
நூலென்ன? குணம தாக
வெற்றிதரும் இலக்கணங்கள் ஏதேனும்
பயின்றனையோ விள்ளு வாயே!"

இது அனைவரிடமும் படிப்பார்வத்தைத் தூண்டத்தக்கதாகும். பாட்டுகள்.

பலவற்றுள் முத்திரை பதித்த பாவலர் உரைநடைகள் பலவும் தந்துள்ளார்.

நபிகள் நாயக ஜீவிய சரித்திரம்,
சீறா நாடகம்,
தேவலோகத்துக் கிரிமினல் கேசு,
வேதாந்த விகார கிரிமினல் கேசு என்பன இவருடைய உரைநடை நூல்களாகும்.

தமிழ்த் தாயின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவராகிய செய்குத்தம்பிப் பாவலர் 1950 பிப்ரவரி 13ல் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். இவர் மறைவுச் செய்தி அறிந்து பண்டிதமணி கதிரேசச் செட்டியார் "நாஞ்சில் நாட்டின் பெரும்புலவரும், தமிழன்னையின் திருப்புதல்வரும் மறைந்தது கேட்டு துயருறுகிறேன்," என்றார். இரசிகமணி டி.கே.சி. "பாவலருக்கு இருந்த நுண்ணிய அறிவும், அபூர்வப் புலமையும் இந்தத் தலைமுறையில் யாருக்கும் இருந்ததில்லை," என்றார்.


நன்றி: தமிழ்மணி (தினமணி)

மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

பெரிய ஆளுமையும் சிறிய ஆளுமையும்!

0 மறுமொழிகள்
இந்த நூற்றாண்டில் எழுந்த இனிய கவிதைகளில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் புகழ் பெற்றவை. பழைய மரபின் படியும் புதிய முறைகளின் படியும் பல புதிய சோதனை முயற்சிகளைக் கவிதைகளில் செயல்படுத்த வேண்டுமென்று முனைப்புடன் இயங்கியவர். போராட்டமும், பரபரப்பும் மிகுந்த காலகட்டத்தில் வாழ்ந்தபோதும் கூட இவருடைய கவிதைகளில் அமைதியும், இனிமையும் இழையோடிக் கொண்டிருந்தது. வெண்பாக்களின் வழியாகச் சொல்ல வந்ததை எளிமையாகவும், தெளிவாகவும் கையாண்டவர்.

தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை
தினமும் கேட்பது என் செவிப்பெருமை

என சக காலத்தில் வாழ்ந்த நாமக்கல் கவிஞரால் பாராட்டப்பட்ட கவிமணி பல்துறைகளிலும் கால் பதித்து விட வேண்டுமென முனைப்புடன் செயல்பட்டவர். ஆராய்ச்சித் துறையிலும் பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார்.

1922 இல்,

"மனோன்மணியம் மறுபிறப்பு" கட்டுரை வழியே திறனாய்வாளராக,
சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக,
கம்பராமாயணம் திவாகரம்,
நவநீதப் பாட்டியல்
முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்தவராக,
"காந்தளூர்ச்சாலை" பற்றிய ஆய்வு நூலாசிரியராக
எனப் பல முனைகளிலிருந்தும் தன்னுடைய ஆளுமையை வெளிக் காட்டியவர்.
வையாபுரிப்பிள்ளை,
இராஜாஜி,
என்.எஸ்.கிருஷ்ணன்
டி.கே. சண்முகம்
போன்றோருடன் நட்பு அடிப்படையிலும், புலமைத்துவ அடிப்படையிலும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். மேற்கண்டவர்களின் வழியாகவும் பல்வேறு துறைகளைப் பற்றிய அறிவைச் சாகும்வரை சேகரித்துக் கொண்டிருந்தவர்.
இந்த நூற்றாண்டில் பாரதி என்கிற பெரிய ஆளுமை மறைத்த சிறிய ஆளுமைகளில் கவிமணியும் ஒருவர். அவருடைய படைப்புலகத்தையும், ஆய்வுலகத்தையும் நோக்கின் பாரதிக்கு இணையாக அவரும் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார் என்பது புலனாகிறது. பாரதியைப் போன்றே கவிமணியும்
பக்திப் பாடல்கள்,
இலக்கியம் பற்றிய பாடல்கள்,
வரலாற்று நோக்குடைய கவிதைகள்,
குழந்தைப் பாடல்கள்,
இயற்கைப் பாட்டுக்கள்,
வாழ்வியல் போராட்ட கவிதைகள்,
சமூகப் பாட்டுக்கள்,
தேசியப் பாட்டுக்கள்,
வாழ்த்துப் பாக்கள்,
கையறு நிலைக் கவிதைகள்,
பல்சுவைப் பாக்கள்...
என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
பாரதிக்கு ஒப்பாக எட்வின் அர்னால்டின் "ஆசிய ஜோதி"யைத் தமிழில் தழுவி எழுதியும், பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதியும் தமிழிலக்கியச் சாளரத்தின் வழியாக பிற நாட்டுக் காற்று உள்ளே வர அனுமதியளித்தவர் கவிமணி. பாரதியாரைப் போலவே இவரும் தமிழ் மக்களிடையே வழங்கி வரும் சில நாட்டுப் பாடல்களின் இசை வடிவங்களைப் பயன்படுத்தி "தீண்டாதோர் விண்ணப்பம்" என்ற பாடலையும் பாடியிருக்கிறார். ஆயினும் அக்காலகட்ட தேசிய, தமிழ்த் தேசிய விவரணைகளில் நம் கவிமணிக்குக் கொடுத்திருக்கும் இடம் வெகு குறைவானதே.

அக்காலகட்டத்தின் சமூகக் கொடுமைகளுக்கும், அன்னியரின் அடிமைத்தனத்திற்கும் எதிரான கவிமணியின் பாடல்களில் தீர்க்கமான முற்போக்குப் பார்வையாளராக அவரை இனங் காண முடிகிறது.

"கண்ணப்பன் பூசை கொளும்
கடவுளர் திருக்கோவிலிலே
நண்ணக் கூடாதோ நாங்கள்
நடையில் வரல் ஆகாதோ."

என்று தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலில் நுழைவதைப் பற்றி சைவப்பிள்ளை ஆச்சார மரபிலிருந்து கொண்டு சிந்தித்தவர். இவரது "மருமக்கள் வழி மான்மியம்" என்ற நூலின் மூலம் நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்க்கையில் அம்முறை ஒழியப் பாடுபட்டவர்.

"அல்லும் பகலும் உழைப்பவர் ஆர் - உள்ளத்து
அன்பு ததும்பி யெழுபவர் ஆர்?
கல்லும் கனியும் கசிந்துருகித்- தெய்வ
கற்பனை வேண்டித் தொழுபவர் ஆர்?"

எனப் பாடியதன் மூலம் அவர் காலத்தில் நிலவி வந்த பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்தவர். சுதந்திர வேட்கை தீயாய்க் கொழுந்து விட்டுக் கொண்டிருந்த காலத்தில் காந்தியத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து சமாதானத்தை வலியுறுத்தியவர். காந்தியின் கொள்கையான மதுவிலக்கு குறித்து,

"கள்ள ரக்கா! குலத்தோடு நீ
கப்ப லேறத் தாமதம் ஏன்?
வள்ளல் எங்கள் காந்தி மகான்
வாக்கு முற்றும் பலித்ததினி."

என்று உற்சாகமாய்ப் பாடுகிறார். இந்தியாவில் சமாதானம் நிலவ வேண்டும் என்றில்லாமல், உலகம் முழுவதும் சமாதானம் நிலவ வேண்டுமென விரும்பியவர். இரண்டாம் உலகப் போரினால் மக்கள் அடைந்த துயரை;

"போரில் எழுந்த பஞ்சம் - பாரத
பூமியைத் தாக்குதைய்யா
நேருங் கொடுமை யெல்லாம் - நினைக்க
நெஞ்சு துடிக்குதைய்யா."

என்ற பாடலின் மூலம் விளக்குகிறார். இதுவரையிலான தமிழ் ஆளுமைகளில் குழந்தைகளின் பிரபஞ்சத்தில் சுதந்திரமாய் நுழைந்து உலவியர் கவிமணி ஒருவரே. குழந்தைகளுக்கான பாடல்களை கவிமணி அளவிற்கு இனி யாராலும் எழுதிவிட முடியாது என்பதை நிறுவியவர். "ஆங்கிலத்தில் உள்ளதைப் போல் தமிழில் குழந்தைப் பாடல்களில்லையே என்று நான் பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் சில பாடல்களை எழுதினேன்," என்று தன்னுடைய குழந்தைப் பாடல்கள் குறித்துக் கவிமணி சொல்கிறார். அவர் சொன்னதுபடியே தன் வாழ்வில் பெரும் பகுதியைக் குழந்தைப் பாடல்கள் எழுதுவதற்காகவே செலவிட்டவர்.

"தோட்டத்தில் மேயுது
வெள்ளைப்பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது
கன்றுக்குட்டி
அம்மா... என்றது
வெள்ளைப்பசு- உடன்
அண்டையில் ஓடுது
கன்றுக்குட்டி."

போன்ற எளிமையான வருணனைகள் அடங்கிய வரிகளின் வழி குழந்தைகளின் உலகில் சிநேகிதமாய்ச் சஞ்சரித்தவர். எளிமையான பாடல்களின் மூலம் குழந்தைகளுக்கு அறிவு புகட்டவும் செய்தார். தான் கண்ட மெய்ம்மையான காந்தியத்தை;

"கூனக்கிழவி நிலவினிலே - இராட்டில்
கொட்டை நூற்கும் பணி செய்வதை இம்
மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே - காந்தி
மாமதி யோங்கி வளருதம்மா."

என்கிற இயற்கை வர்ணனையோடு ஒட்டி குழந்தைகளுக்குப் புரிய வைத்தவர். பல்வேறு உத்தி முறைகளில் பாடி குழந்தைப் பாடல்களைப் பல்வேறு தளத்திற்கும் பரவச் செய்தவர் கவிமணி.

தேசம், மொழி, மக்கள், உலகம் என பெரும் வட்டத்தைத் தன் பாடல்களுக்குள் அடக்கி சத்தமில்லாமல் தமிழ் உலகில் சஞ்சாரம் செய்தவர். அவர் மறைந்து கிட்டத்தட்ட 46 வருடங்கள் (செப்டம்பர் 26) ஆகிவிட்ட பிறகும், அவருடைய பணிகள் கல்வியாளர் மட்டத்தைத் தவிர்த்து பெரும்பான்மையான மக்களுக்குச் சென்று சேரவில்லை. எந்த ஒரு காலகட்டத்திலும் பல்வேறு குரல்கள் ஒலிக்கும். ஆனால் தொடர்பு ஊடகங்களும், கல்வித் துறையில் முதன்மை நிலையிலிருப்பவர்களும் தங்களுடைய சுய இலாபத்திற்காக ஒரு சில குரல்களை மட்டும் முன் வைத்துப் பிரச்சாரம் செய்ய முற்படுகின்றனர்.

அவர்கள் பிரச்சாரம் செய்து முன்னிறுத்தும் ஒற்றைக் குரல் மற்ற குரலின் ஆகிருதிகளையெல்லாம் மறைத்து விடுகின்றது. அப்படி மறைக்கப்பட்ட, முன்னிறுத்தப்படாத குரலில் ஒன்று கவிமணியின் குரல். கவிமணியை வெறும் குழந்தை இலக்கியக் கவிஞனாக மட்டுமே அடையாளம் காட்டும் போக்கும் நிகழ்ந்தேறியுள்ளது. ஆனால் அதையெல்லாம் மீறி ஒரு உண்மைக் கலைஞன் மக்களின் மனதில் நிலைத்துக் கொண்டுதானிருப்பான் என்பதற்கு சாட்சி இந்தக் கட்டுரை....

சரவணன்

நன்றி: ஆறாம்திணை
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

"வீரமுரசு" சுப்பிரமணிய சிவா

0 மறுமொழிகள்
நாற்பத்தொன்று ஆண்டு கால வாழ்க்கையில் (1884-1925), பத்தொன்பது ஆண்டுகள் "வீரமுரசு" சிவாவின் பொதுவாழ்க்கை அமைந்தது. இந்தப் பத்தொன்பது ஆண்டுகளில் பத்தாண்டுகள் சிறை வாழ்க்கையில் கழிந்தன. எஞ்சிய ஆண்டுகளில்,
ஓயாத அரசியல் சுற்றுப் பயணங்கள்,
கிளர்ச்சிகள்,
பத்திரிகைப் பணிகள் முதலானவற்றுடன்
தமிழ்ப் பணியிலும்
தடம் பதித்தவர் சிவா.

அவரே ஓர் இயக்கமாக விளங்கினார்.
அரசியல்,
ஆன்மிக,
சமூக,
தொழிலாளர் இயக்கம்
எனப் பல்வேறு இயக்கங்களை சிவா முன்னின்று நடத்தினார். இவற்றுள் அவர் தமிழ் இயக்கமாகச் செயலாற்றியது குறிப்பிடத்தக்கது, அவருடைய மறைந்த நினைவு நாளாக ஜூலை 23-ல் இதனை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தத்தக்கது.

"ஸ்வதந்திரானந்தன்" எனும் புனைப் பெயரை வைத்துக் கொண்ட சிவா, தமது எழுத்துப் பணியின் நோக்கத்தை "எனது பிரார்த்தனை" எனும் பாடலில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"வெளியில் வந்தேன் - விடுதலையடைந்து
களியில் மனிதனைக்- கண்ணால் கண்டேன்
வறுமை, வியாதி, மரணம், பஞ்சம்
சிறுமை யிவற்றால் - சீர் அழிகின்
தமிழராம் மக்களைத் தட்டியெழுப்பி
அமிழ்தாம் ஞான - ஆனந்தமூட்டி
வீரம், ஆண்மை - வெற்றி பெருமை
தீரம் முதலாம் - தேக புகுத்தி
சிறந்தோரென்றே - சீரியர் செப்ப
அறந்தான் செய்ய - அன்புடன் முயன்று
பத்திரிகை புத்தகம் - பல வழியாக
உரிமை வேண்டி - உரிமை வேண்டி
இரவும் பகலும் - எழுதியெழுதி
வரவும் என்கை வலிக்குது ஐயோ?"
இப்பாடல் "தமிழ்த்தென்றல்" திரு.வி.க.வின் "தேசபக்தன்" நாளிதழின் 1918-ம் ஆண்டு மலரில் வெளிவந்தது.

தேசியச் செம்மல் வ.உ.சி.யுடன் 3.2.1908 முதல் இணைந்து மேடைத்தமிழை வளர்த்தார் சிவா.

"பிரசங்க மாரி பெய்தனன் நஞ்சிவம் நரசிங்க மென்றிடக் கர்சித்து நின்றே!" என்று சிவாவின் மேடைத்தமிழைப் பாராட்டியுள்ளார் வ.உ.சி.

பத்திரிகைத் துறையில் சிவா வளர்த்தத் தமிழ், சமூகம், ஆன்மிகம், தமிழ்ப்பற்று முதலான நோக்குகளில் விரிவான ஆய்விற்குரியது.
ஞானபானு,
பிரபஞ்சமித்திரன்,
இந்திய தேசாந்திரி
எனும் இதழ்களில் அவருடைய பத்திரிகைத் தமிழ் வளர்ச்சிப் பணி தொடர்ந்தது.

"ஞானபானு" அவரால் 1913 ஏப்ரல் மாத இதழாகத் தொடக்கம் பெற்றது. பொறுப்புத் தொகை கட்டக்கூடப் பணவசதி இல்லாமல் வறுமையில் வாடிய நிலையில் தொடங்கிய "ஞானபானு"வை நான்கு ஆண்டுகள் நடத்தினார் சிவா. தாம் எழுதியதோடல்லாமல்,
பாரதியார்,
வ.வே.சு.ஐயர்,
வ.உ.சி.,
மகேசகுமார் சர்மா,
வ.ரா
முதலான தமிழ்ச் சான்றோர்களையும் ஞானபானுவில் எழுதவைத்தார்.

தமிழ் வளர்ச்சிக்கான கருத்துப் போருக்கு "ஞானபானு"வில் களம் அமைத்துக் கொடுத்தார் சிவா. 1915 ஜூலை இதழில் வெளிவந்த பாரதியாரின் "தமிழில் எழுத்துக் குறை," எனும் கட்டுரையின் மீதான கருத்துப்போர், பாரதியார் - வ.உ.சி.யிடையே நிகழ்ந்தது. ஆங்கில மோகத்தில் ஆழ்ந்து தமிழைப் புறக்கணித்து ஆங்கிலச் சொற்களை ஆள்வதில் ஆர்வம் காட்டியவர்களை "ஞானபானு"வில் சாடினார் சிவா.

"சுதேசமித்திரன்" தமிழ் நடையில் ஆங்கிலச் சொற்களின் கலப்பு கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டு சிவா, 8.8.1915-ல் சுதேசமித்திரன் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் பின்வரும் கருத்தைச் சுட்டிக்காட்டினார். "தமிழ்ப் பாஷையைத் தனி பாஷையென்று தமிழ்ப் பண்டிதர்களில் பலரும் மண்டையுடைத்துக் கொள்கிறார்கள். ஆனால், இப்பொழுதோ தமிழர்களுக்குள் பெரும்பான்மையாக வழங்கிவரும் மிக்க பத்திரிகைகளும் தமிழ்ப் பாஷையைச் சித்திரவதை செய்கின்றன இது மிகவும் விசனிக்கத்தக்கது. தமிழ்ப்பாஷையை ஆதரித்துக் காப்பதற்குத் தாங்களும் தங்களுடைய பத்திரிகைகளும் முயற்சிக்க வேண்டும்."

1915 ஜூலை 15-ம் தேதி வெளிவந்த "ஞானபானு" இதழில் தனித்தமிழில் எழுதி அனுப்பும் கட்டுரைக்கு ஐந்து ரூபாய் பரிசளிக்கப்படும் எனும் பின்வரும் விளம்பரம் வெளியிடப்பட்டது.


உங்களால் தனித்தமிழில் எழுத முடியுமா?

முடியுமானால் எழுதுங்கள். சமஸ்கிருதம் முதலிய அந்நிய பாஷைச் சொற்களில் ஒன்றும் கலவாது தனித்தமிழில் நமது ஞானபானுவில் எட்டுப் பக்கத்துக்குக் குறையாது வரும்படியாக தமிழ்ப் பாஷையின் சிறப்பைப் பற்றியாவது திருவள்ளுவ நாயனாரின் சரித்திரத்தையாவது எழுதுவோருக்கு ரூபா ஐந்து இனாமளிப்பதாகத் தமிழபிமானி ஒருவர் முன்வந்திருக்கிறார்.
கலைச் சொல்லாக்கத்தில், "ஆங்கில வார்த்தைகளுக்குச் சரியாகப் பொருள்படும்படியான தமிழ்ச் சொற்களை உண்டு பண்ணிக் கொள்ளுதல் அவசியமாகுமே தவிர ஆங்கிலப் பதங்களை அப்படியே தமிழ் எழுத்துக்களிலும் எழுதிவிடுவது ஸ்வய பாஷையைக் கொலை செய்தது போலாகும்," என்று வலியுறுத்தினார் சிவா.

குறள் நெறி பரப்பிய முன்னோடி:-

குறள் நெறியைப் போற்றிப் பரப்பிய தமது நண்பர் வ.உ.சி.யைப் போலவே, சிவாவும் குறள் நெறியைப் பரப்புவதில் முன்நின்றார். "ஞானபானு"வின் முகப்பில் பின்வரும் குறட்பாவைப் பயன்படுத்தினார் சிவா.

"அறிவுடையா ரெல்லா முடைய ரறிவிலா ரென்னுடைய ரேனு மிலர்"

நீதி மன்றத்தில் 1921-ல் அளித்த வாக்கு மூலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொடுங்கோன்மையை அம்பலப்படுத்தும் வகையில்,


"கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேற்று."

"வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு."
எனும் இரு குறட்பாக்களை எடுத்துரைத்தார் சிவா. நீதிமன்ற வாக்கு மூலத்தில் முதன் முறையாக இடமறித்து, பொருளறிந்து குறட்பாக்களைப் பதிவு செய்த முன்னோடியாகத் திகழ்ந்தார். வழிபாட்டு உணர்வுடன் பரவச நிலையில் திருவள்ளுவரைச் சொன்மலர் கொண்டு தூவிப் பரவி சிவா பின்வருமாறு வழிபாடு நிகழ்த்தினார்:


எத்தனையோ யோகீஸ்வரர்கள்,
எத்தனையோ ரிஷீஸ்வரர்கள்,
எத்தனையோ மகான்கள்
எண்ணற்ற சாஸ்திரங்களையும் பரோபகார்த்தமாக எழுதி இருக்கின்றனர்.
எல்லாப் பாஷைகளிலும் எல்லாத் தேசங்களின் எத்தனையோ சாஸ்திரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
ஆயினும் தேன்மொழி போற்ற நமது தென் மொழியில் திருவள்ளுவர் இயற்றியருளிய திருக்குறளைப் போன்றதோர் நூல்
எத்தேசத்திலும் எப்பாஷையிலும் எவராலும் இயற்றப்படவில்லை என்று நாம் கூறத் துணிகிறோம்.
தமிழ்ப் பாஷைக்கு என்றும் அழியாத் தன்மையை ஏற்படுத்தியவர் திருவள்ளுவர் என்று மேல் நாட்டாரும் ஒப்புக்கொள்கின்றனர்.
இவர் வீண் பாஷா ஞானி மாத்திரம் அன்று; ஆத்ம ஞானதீரர்.

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக."
எனும் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியபொழுது மேற்கண்டவாறு சிவா கூறியுள்ளார். இக்கட்டுரையில் சிவா ஒப்பாய்வு நோக்கில் வேதாந்த பிரம்ம சூத்திரத்தைவிட திருக்குறள் பெரும்பான்மையோருக்குப் பயனளிக்கத்தக்கது எனச் சாற்றியுள்ளார். சிவா ஒரு வேதாந்தி என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. அவரது ஒப்பாய்வின் ஒருபகுதி வருமாறு:

"பிரம்ம சூத்திரம், பிரம்ம வஸ்துவைக் குறித்துப் பிரதிவாதிப்பதாம், குறள் எல்லோருக்கும் அவரவர்களுடைய தற்கால நிலையிலிருந்து அதனினும் உயர்ந்த நிலையை அடைய உதவி செய்வது; பிரம்ம சூத்திரம் பிரபஞ்சப் பற்றுகளை எல்லாம் துறந்துவிட்டு பிரம்ம ஞானானுபூதியே லட்சியமாய்க் காடு, மலை, குகைகளில் தனி வாசம் செய்தோ, அல்லது ஈஸ்வர சிருஷ்டியின் இயற்கை அழகு மிகுந்துள்ள ஆரண்யங்களிலேனும் அல்லது அதிபரிசுத்தமான க்ஷேத்திரங்களிலேனும் சங்கங்கள் சேர்ந்து வாசஞ்செய்தோ, ஜீவிய காலத்தைக் கழிக்கின்ற சர்வசங்க பரித்தியாகிகளே பாராயணம் பண்ணி ஆராயத்தக்கது. பிரம்ம சூத்திரம் பிரபஞ்சத்தில் பெரும்பான்மையோருக்கும் பிரயோஜனமாக உள்ளதன்று. ஆனால், திருக்குறளோ முழு மூடன் முதல் முழுதும் உணர்ந்த முக்தர் வரையில் சகலருக்கும் இன்றியமையாத இனிமை மிக்க விஷயங்கள் நிறைந்துள்ளது. ஆகையால் திருக்குறளைப் போன்றதோர் நூல் இவ்வுலகமெங்கும் தேடித்திரிந்து பார்த்தாலும் கிடைக்காது என்று நாம் துணிந்து கூறுகிறோம்." வ.வே.சு. ஐயரின் திருக்குறள் ஆங்கிலப் பதிப்பை கையடக்க நூலாக 1916-ல் சிவா வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பன்னூலாசிரியர்:-

சிவாவின் நூல்கள் இருபத்து மூன்று கிடைத்துள்ளன. இவற்றுள்,
முதல் நூலான சச்சிதானந்தசிவம் (1911),
ஆத்ம ஞான ரத்னம்,
பகவத்கீதா சங்கிரகம்

ஆகிய மூன்றும் சிறைவாழ்க்கையில் எழுதப்பட்டுள்ளன. இராமகிருஷ்ணர் - விவேகானந்தர் இலக்கியக் களஞ்சியத்துக்கு பன்னிரண்டு நூல்களைப் படைத்தளித்துள்ளார் சிவா. முப்பெரும் ஞானிகளான

ஆதிசங்கரர்,
இராமானுஜர்,
மத்வர் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.

"திலகர் - காந்தி தரிசனம்" என்னும் ஓரங்க நாடக நூலையும்,
நளின சுந்தரி அல்லது நாகரிக தடபுடல் எனும் புதினத்தையும் எழுதியுள்ளார் சிவா.
தமிழ் இயக்க முழக்கங்கள்:-

தமிழ் இயக்கத்துக்கான முழக்கங்களையும் 1916-ல் பின்வருமாறு சிவா ஒலித்துள்ளார்: "தமிழ்ப் பண்டிதர்களே! தமிழ் மகா ஜனங்களே! ஜாக்கிரதை! ஜாக்கிரதை! உங்களுடைய பாஷையைக் காப்பாற்றுங்கள். ஒரு ஜன சமூகத்துக்கு உயிர், அதன் பாஷைதான். தமிழ் பாஷை அழிந்துவிட்டால் தமிழர்களின் சிறப்பும் சீரும் அழிந்துவிடும். உங்கள் நா தமிழே பேசுக; நீங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக; உங்களுடைய இருதயம் தமிழையே நாடுக."


பிரிட்டிஷ் ஏகாதிபத்ய எதிர்ப்பில் வீரமுரசாக ஒலித்த சிவா, தமிழ் வளர்ச்சிப் பணியில் "தமிழ் முரசா"கவும் ஒலித்தார்.

பெ.சு.மணி

நன்றி: தமிழ்மணி (தினமணி)

மின்தமிழ் இடுகை: நடராஜன் கண்ணன்

"இராகசுரபி" செம்மங்குடி

0 மறுமொழிகள்
செவி வழிப்புகுந்து, சிந்தையில் உறைந்த பாடகர் அமரர் மகாவித்வான் டாக்டர் செம்மங்குடி சீனிவாசய்யர். இன்று(25/07/2008) அவரது 100வது பிறந்தநாள்.

2003 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மறைந்த அந்த மேதை, இன்னும் 5 ஆண்டுகள் மட்டும் வாழ்ந்திருப்பாரானால் "வேத நூற்பிராயம் நூறு" என்ற தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய பாசுர வரியின்படி 100 வது வயதைத் தொட்டுச் சாதனை படைத்திருப்பார்.



எட்டாம் வயதிலேயே வாய்ப்பாட்டில் நாட்டம் கொண்ட அவர், 9 வது வயதில் தனது தமையனார் வயலின் மேதை செம்மங்குடி நாராயணஸ்வாமி ஐயரிடம் முதலில் பயிற்சி பெற்றார்.

பின்னர் திருவிடைமருதூர் கோட்டு வாத்திய வல்லுநர் சகாராம் ராவிடம் பயிற்சி பெற்றார். 1920 ஆம் ஆண்டு மகாவித்வான் உமையாள்புரம் சாமிநாதய்யரிடம் குருகுலவாசம் செய்தார்.

திருவிடைமருதூரில் பயின்றுவந்த காலத்தில் பிரபல நாகஸ்வர அறிஞர்களின் வாசிப்பைக் கேட்டும், மதுரை புஷ்பவனம், பிடில் கோவிந்தசாமி பிள்ளை போன்ற பெரும் கலைஞர்களின் சங்கீத ஆளுகைகளைக் கேட்டும் அப்படியே அவர்கள் வழங்கிய நுட்பங்களை தம்குரல் வழியில் பாடும் இலாகவத்தைப் பெறலானார்.

கும்பகோணம் வந்தபோது, தம் தமயனாரான வயலின் மேதை செம்மங்குடி நாராயணஸ்வாமி ஐயரிடமே தொடர்ந்து கற்கலானார். இந்தக் காலகட்டத்தில் அன்றாடம் எட்டுமணி நேரம் சாதகம் செய்த வித்வான் அவர்.

நாராயணஸ்வாமி ஐயரிடம் பயில்வதற்குத் தடைகள் ஏற்படவே மனோதர்ம மன்னர் மகாராஜபுரம் விஸ்வநாதய்யரிடம் பயிற்சிபெற ஏற்பாடானது. அந்த நேரத்தில் தான் இவருக்குக் குரலில் குளறுபடி தலைதூக்கி, தொல்லையும், இடைஞ்சலும் தந்தது. இதைத் தமது அபாரமான சாதக பலத்தால் சமாளித்து. சாரீரத்தைப் பொங்கிப்பாயும் பிரவாகம் போல் மாற்றிக் கொண்டு விட்டார்.

நாகஸ்வர பாணியில் அதிதீவிர ஆர்வம் கொண்டவர். அமரர் திருவாவடுதுறை நாகஸ்வர சக்கரவர்த்தி இராஜரத்தினம் பிள்ளையை "இராக ரத்தினம்" என்று சொல்லி, ஏற்றிப் புகழ்ந்து போற்றியவர். இந்த வாத்தியத்திலிருந்து எழுந்துவரும் அனைத்து அழகு வடிவங்களையும் அப்படியே கவர்ந்து தமது சாரீரத்தின் வழியாக வெளியிட்ட சாதகி அவர்.


இராகங்கள் நமது கர்நாடக இசையில் தனிச்சிறப்புக் கொண்டவை.
கரகரப்ரியா,
சண்முகப்ரியா,
காம்போதி,
தோடி,
பைரவி
போன்ற இராகங்களை நாகஸ்வர மேதைகள் எப்படி எப்படி எல்லாம் கற்பனைகள் பொழிந்து, மணிக்கணக்கில் ஜோடிப்பார்களோ அதை விடவும் மேலாக அந்த இராகங்களை ஈடற்ற கற்பனைகளோடும், இணையற்ற ஜோடனைகளோடும் ஆலாபித்து இரசிகர்களை மெய்மறக்கச் செய்த கலைஞர் அவர்.

நீராடும் நேரமாயிருந்தாலும் சரி, உணவு கொள்ளும் வேளையானாலும் சரி ஏதாவது ஒரு இராகத்தைத் துவக்கி ஆலாபிக்க ஆரம்பிப்பார். கையில் எடுத்த உணவுக்கவளம் அப்படியே இருக்கும்! இதைக் கண்ணாரக் கண்டவன் நான். சாப்பிடும்போதும் இவருக்கு ஒரு சிறு "சதஸ்" வேண்டும்!


எனவே, இராகம் பாடுவதில் கைதேர்ந்த மாபெரும் கலைஞர் என மதிக்கப்பட்ட டாக்டர் செம்மங்குடியை "இராகசுரபி" என்று குறிப்பிடுவதே பொருத்தம். இவர் பாடாத இசைக்கூடமே இல்லை.
வயலின் மேதை செம்மங்குடி நாராயணஸ்வாமி ஐயர்,
கோட்டு வாத்திய சிகாமணி சகாராம் ராவ்,
மனோதர்ம ஜோதி மகாராஜபுரம் விஸ்வநாதய்யர்,
ஞானச்சுடர் உமையாள்புரம் சாமிநாதய்யர்
ஆகியோரிடம் எல்லாம் குருகுலவாசம் செய்திருந்த போதிலும் காயக சிகாமணி "அரியக்குடி" இராமானுஜ ஐயங்காரையே தமது மானசீக குருவாகப் போற்றி வந்தவர்.

"அரியக்குடி"யின் பாட்டு அசைந்தும் ஒசிந்தும் இயங்கும் ஒரு அழகிய தேருக்கு (இரதம்) இணையானது.

கச்சேரிகளை,
அடிப்பகுதி,
நடுப்பகுதி,
தலைப்பகுதி
என்று மூன்று கட்டங்களாக வகுத்து, ஜோடித்துப்பாடி, மேடைக் கச்சேரிகளுக்கே ஒரு மோஸ்தரை அமைத்து அளித்த ஒரு அபூர்வப்பிறவி இவர் என்று கூறி நெகிழ்ந்து மகிழ்ந்தவர்.

"நான் மறுபிறவி எடுத்தால் அப்போதாவது "அரியக்குடி" ஐயங்கார் மாதிரி பாட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். நீயும் எனக்காகப் பகவானை நேர்ந்துகொள்!" என என்னிடம் ஒரு தடவை கூறி, தமது உள்ளக்கிடக்கையை வெளியிட்டவர்.


தாமே கைராட்டையில் நூல்நூற்று காந்தி மகான் கட்டளைப்படி கதராடைகளை அணிந்து வந்தவர். இசையில் மூன்று ஸ்தாயிகள் போல அவரிடம்,
குருபக்தி,
தெய்வபக்தி,
தேசபக்தி
மூன்றும் இடம் பெற்றிருந்தன.

திருவாங்கூர் மன்னர் குடும்பத் தொடர்பு பெற்றிருந்த அவர், ஆஸ்தான வித்வானாகி, பின்னர் ஸ்வாதித்திருநாள் இசைக்கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் பிரபல இசைக்கலைஞர்களை எல்லாம் வரவழைத்து அவர்களை மன்னர் குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தி, தக்க சன்மானங்களையும், மரியாதையும் அளிக்கச் செய்து கெளரவித்தார்.

மகாகவி பாரதியார் பாடல்களைக் கச்சேரிகளில் பெருமெடுப்பில் கணிசமாக வழங்கி, களைபெறச் செய்தவர்களில் "செம்மங்குடி"க்கே முதலிடம் தரவேண்டும்.


மகாராஜா சுவாதித் திருநாள் கீர்த்தனைகள்,
சதாசிவ பிரும்மேந்திரரின் பக்திரசப் பாடல்கள்,
அஷ்படதி, மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி
ஆகிய படைப்புகளுக்கு நவநவமான மெட்டுகள் அமைத்து, ஸ்வரப்படுத்தி, "சுதேசமித்திரன்" செய்தி ஆசிரியராக இருந்த அடியேனிடம் பிரசுரத்துக்குத் தந்து உதவிய பெருந்தகை இவர்.

இவை யாவும் 1933 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டுவரை சுமார் 70 ஆண்டுகள் நான் அவரிடம் கொண்டிருந்த பழைய நினைவுகள். "செம்மங்குடி" வென்ற விருதுகள், பட்டங்கள், கெளரவங்கள் இவற்றின் பட்டியல் மிக நீண்டதாகும். மிகப்பெரிய இரசிகர் வட்டத்தைப் பெற்றிருந்தவர் என்றால் மிகையேயல்ல!

பத்திரிகைகளிடமும், பத்திரிகையாளரிடமும் நிறைந்த பரிவு கொண்டிருந்தவர். சென்னையில் பத்திரிகையாளர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டட நிதியுதவிக்காக ஏற்பாடான கச்சேரி வரிசையில் முதலிடம் பெற்றுப்பாட சென்னைக்குத் தன் சொந்தச் செலவில் வருகை புரிந்தார். பயணச் செலவுக்காக அவருக்கு அளித்த பணத்தைக்கூட பத்திரிகையாளர் கட்டட நிதியிலேயே சேர்க்கும்படி என்னிடம் சொல்லிவிட்டார்.

நீலம் - கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்

நன்றி: தினமணி
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்
செம்மங்குடியின் பேட்டி காண இங்கே சொடுக்குக!

நடுகல் - "சதி"கல் வழிபாடு!

0 மறுமொழிகள்
மனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும் பயத்தின் அடிப்படையில் எழுந்தன.

இடி,
மின்னல்,
மழை,
சூரிய வெப்பம்,
கொடிய விலங்குகள்

ஆகியன மனிதனை பயமுறுத்தின. அதே வேளை மரங்கள் நிழலையும் கனிகளையும் தந்தன. இப்படித்தான் இறைபக்தி ஏற்பட்டது. அப்பக்தி பரிணமித்து வழிபாட்டு முறைகளாய் எழுந்தது. மரங்கள் மனிதனின் குலக்குறி நம்பிக்கையின் (Totemism)அடையாளமாக விளங்கின. இறைவனென்று கொண்டவற்றுக்குப் படையல்கள், பலிகள் இட்டு வழிபட்டனர். இயற்கை வழிபாடு உருவ வழிபாடாக வளர்ச்சியடைந்து நிலைத்தது. எனினும் நடுகல் வழிபாடு மற்றும் சதிகல் வழிபாடு போன்றவையும் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன.



கொரியாவில் குலக்குறி நம்பிக்கையின் (Totemism)அடையாளம்



நடுகல் வழிபாட்டின் தோற்றம்:

கற்களை அடையாளமாக நடுவதால் "நடுகல்" எனப்பட்டது. இம்முறை ஒரு வகையில் சிவநெறியில் லிங்கத்தை நடுவது போன்றதாகும். நடுகல் நாட்டுப்புற முறையாகவும், பள்ளிப்படைகோயில் (மன்னர்கள் இறந்த இடத்தில் கல்நட்டு கோயில் எழுப்புதல்) அரசபாணியாகவும் கருதப்பட்டது. சங்க காலத்தில் தன்னால் இயன்றவரையில் போர்புரிந்து உயிர்விட்ட வீரனது உடலைப் புதைத்த இடத்தில் (அ) எரித்த இடத்தில் ஒரு கல்லை நடுவர். அக்கல்லில் அவனது உருவத்தையும், பெயரையும் இன்னபோரில், இவ்வாறு போர்புரிந்து மாண்டான் என்ற விவரத்தையும் பொறிப்பர். இக்கல்லே நடுகல் எனப்படும். கற்குவைகளால் மூடப்பட்ட நடுகல், "கற்பதுக்கை" என்னும் பெயரில் அழைக்கப்பட்டது. போரில் ஈடுபடும் வீரர்கள் வெற்றிவாகை சூடி வரவேண்டுமென்று அவர்தம் மனைவிமார்கள் தம் குடி முன்னோரின் நடுகல் முன் அமர்ந்து வழிபட்டனர். நன்னனுடைய மலைகள் மீது இத்தகைய நடுகற்கள் அதிகளவில் இருந்தன. அவ்வழியாகச் சென்ற கூத்தர், பாணர் போன்றோர் யாழ் வாசித்து அத்தகைய நடுகல் வீரர்களை வழிபட்டுச் சென்றனர்.

நடுகல் எடுப்பு விழா:

நடுகல் எடுப்பு விழா அறுவகைப்படும். அவை:-

கற்காண்டல்,
கால்கோள்,
கல்லை நீர்ப்படுத்துதல்,
கல்லை நடுதல்,
வீரன்-பெயர்-செயல் பொறித்தல்,
கால் கொண்ட தெய்வத்திற்கு சிறப்பு செய்து வாழ்த்துதல்.
செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுத்தமை இதே மரபினதாகும்.

கொரியாவில் நடுகல் வழிபாடு



நடுகல் வணக்கத்தின் பொருள்:

"தாய்நாட்டின் பொருட்டு போரிட்டு உயிர்நீத்த வீரத்தமிழனுக்கு நினைவுக்கல்லை நட்டு அவ்வீரனை போற்றுதல்," அவனை சான்றாகக்கொண்டு மற்ற தமிழர் நடக்கமுயலல், அவனது புகழ் உலகம் உள்ளளவும் நிலவுக! என்பனவேயாகும். வீரர்கள் மட்டுமல்லாது, விலங்குகளின் நினைவாகக்கூட நடுகற்கள் நடப்பட்டன. காளைகளின் நினைவாக நடப்பட்ட நடுகற்கள் தும்கூர் (கர்நாடக மாநிலம்) மாவட்டத்தில் அதிகளவில் காணப்படுகின்றன. தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானுக்கு அருகிலுள்ள குப்புக்குறிச்சி என்னுமிடத்தில் "பசுக்கூட்டம்" என்றழைக்கப்படும் இத்தகைய நடுகற்கள் காணப்படுகின்றன.

தமிழகத்தின் முதல் நடுகல் கண்டுபிடிப்பு:

எகிப்து நாட்டில் பிரமிடுகள் எவ்வாறு வரலாற்றுச் சின்னங்களாகத் திகழ்கின்றனவோ, அதே போன்று தமிழகத்தில் "நடுகல்" திகழ்கிறது. இவ்வாறு எழுப்பப்பட்ட நடுகல்லை முதலில் கண்டெடுத்தவர் பேரா.சுந்தரம் பிள்ளை. ஆரல்வாய்மொழியை (கன்னியாகுமாரி மாவட்டம்) அடுத்துள்ள கோட்டைக்கரையில் பாண்டிய மன்னன் மாறன்சடையனின் (கி.பி 765-790) காலத்தில் வட்டெழுத்தில் செதுக்கப்பட்ட ஒரு நடுகல்லை பேராசிரியர் கண்டறிந்தார். இரணகீர்த்தி (மாறன் சடையனின் படையைச் சேர்ந்தவன்) என்ற வீரனது நினைவாக நடுகல் நடப்பட்டிருப்பதை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பல நடுகற்கள் தமிழகம் முழுவதும் வரலாற்றாளர்களால் கண்டறியப்பட்டன.

நடுகல் முறையின் சிறப்புகள்:

போரில் இறந்தவர் அல்லாமல், அறிவிலும் ஒழுக்கத்திலும் மிக்கார் நினைவின் பொருட்டு "கல் எடுத்தலும்" உண்டு. சங்கச் செய்யுள் ஒன்றில் மங்கையின் வீரம் பற்றிக் கூறும் போது, "எந்தை, முன் நடந்த போரில் இறந்துபட்டு கல் ஆனான்" என மங்கையின் கூற்றாகப் புலவர் குறிக்கிறார். "பன்றிகுத்திப்பட்டான் கல்" என்பது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு நடுகல்லாகும்.

சதிகல் வழிபாடு:

நடுகல் வழிபாட்டிற்கும் சதிகல் வழிபாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கணவனது இறப்பினை அறிந்தவுடன், தீப்பாய்ந்து இறக்கும் பெண்களின் நினைவாக நடப்படும் கல் "சதிகல்" எனப்பட்டது. மணிமேகலையில் பத்தினிப்பெண்டிர் மூவகையினராகப் பிரிக்கப்படுகின்றனர்.

கணவனுடன் எரிமூழ்கி இறப்பவர் முதலாமவர்,
தனியே எரிவளர்த்து அதனில் வீழ்ந்து இறப்பவர் இரண்டாமவர்,
எஞ்சியவர் கணவனை நினைத்து அடுத்த பிறவியில் அவனுடன் வாழ்வதற்காக, கைம்மை நோன்பு நோற்பர்.

ரிக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும் "சதி" பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உடன்கட்டை ஏறும்போது சொல்ல வேண்டிய மந்திரங்களும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. (ரிக். 10.18.8: அத.28,3.1) இதன் வாயிலாக உடன்கட்டை ஏறுதல் வழக்கத்தின் பழைமையை உணரலாம்.

மன்னர்தம் ஆதரவு:

சேரன் செங்குட்டுவன் கி.பி 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். சேரன் செங்குட்டுவனின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மறைந்தபோது, குலவழக்கப்படி நெடுஞ்சேரலாதனின் மனைவியான "நற்சோணை" என்ற சோழ மகள் உடன்கட்டை ஏறினாள். செங்குட்டுவன் தன் தாயாரின் நினைவாக கோயில் எடுக்க எண்ணி, இமயமலையிலிருந்து கல் கொண்டு வந்து கோயில் எடுத்தலே சிறப்பு எனக்கருதி இமயத்தின் மீது படையெடுத்து கல்லெடுத்து கங்கையில் நீராட்டி நாடு மீண்டான். "நற்சோணையம்மன்" சேரர் குலதெய்வம் ஆனாள். தீப்பாய்ந்து இறந்த மறப்பெண்டிர் வம்சத்தார்க்கு மன்னர்களும், செல்வந்தர்களும் நிலங்களைத் தானமாக வழங்கினார். அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள்

உதிரப்பட்டி,
ரத்தக்காணி,
தீப்பாஞ்சகாணி

எனக் குறிக்கப்பட்டன.

பத்தினித் தெய்வ வழிபாடு:

உடன்கட்டை ஏறிய பெண்கள் பத்தினித் தெய்வமாகவும் வணங்கப்பட்டனர். கோவலனை இழந்த கண்ணகி மதுரையை விட்டுப் புறப்பட்டு வைகைக்கரை வழியே ஆவேசமாகச் சென்றாள், பின்னர் வருஷநாடு மலைவழியாக சுருளிமலையின் மேற்குத் தொடர்ச்சியான மங்கலதேவி மலைக்கு வருகிறாள், கண்ணகி, தெய்வமான இடம் இதுவேயாகும். சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் நினைவாக இவ்விடத்தில் கோயிலை உருவாக்கினான்.


பத்தினித் தெய்வ வழிபாட்டின் பரவல்:

முதலாம் இராசராசன், மங்கலதேவி கோட்டத்திற்கு வந்து கண்ணகியின் சிறப்பை உணர்ந்து, திருப்பணி செய்ததோடு மட்டுமல்லாது, பிடிமண் எடுத்துச் சென்று தஞ்சையில் பத்தினித் தெய்வ வழிபாட்டைத் தொடங்கி வைத்தான். இக்கோயில் சிங்கள நாச்சியார் - செங்கள நாச்சியார் என்று வழங்கி பின் செங்களாச்சியம்மன் கோயிலாக தற்போது உள்ளது.
யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கண்ணகிக்குக் கோயிலமைத்த இடம் "அங்கணக்கடவை" எனப்படும்.

சிங்களநாட்டில் "பத்தினி தெய்யோ" என வணங்கப்படும் தெய்வம் கண்ணகியே என்பது இலங்கையின் வரலாற்றாளரான செ. இராசநாயகத்தின் கருத்தாகும்.

நடுகல் வழிபாடும், சதிகல் வழிபாடும் இன்றைய காலகட்டத்தில் சிறுதெய்வ வழிபாடுகளாக மக்கள் மத்தியில் நிலைபெற்றுவிட்டதாகவே கூறவேண்டும்.

கொரியாவில் முதுமக்கள் தாழி!


ஆய்வாளர் இல. கணபதிமுருகன்

நன்றி:- தமிழ்மணி (தினமணி)

மின்தமிழ் இடுகை: டாக்டர் கண்ணன் நடராஜன்
படங்கள்: முனைவர் நா.கண்ணன்

"தமிழ் ஞாயிறு" பண்டிதமணி

0 மறுமொழிகள்
'பூங்குன்றம்' என்னும் பெயரைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் இரண்டுபேர். ஒருவர், "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடிய சங்கச் சான்றோர் கணியன் பூங்குன்றனார். மற்றொருவர், "பண்டிதமணி" என்று அனைவராலும் போற்றப்படும் மகாமகோபாத்தியாய, முதுபெரும் புலவர் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார். ஏழு மாதம் கூடப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயிலாமல், பன்னிரண்டு ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து, தமிழ்ப்பணி ஆற்றிய தனிச்சிறப்பு இவருக்கு உரியது.

முயற்சியும் மன உறுதியும் இருக்குமானால் உடல் ஊனமுற்றவர்களும் உயர்நிலையை அடைய முடியும் என்பதற்குக் கதிரேசனாரின் வாழ்க்கை எடுத்துக்காட்டாகும்.

பண்டிதமணி மூன்று வயதில் இளம்பிள்ளை வாதத்தால் தாக்கப்பெற்றார். குடும்பச் சூழல் முறையான கல்வியைப் பெற அவருக்குத் துணை நிற்கவில்லை. பதினோரு வயதில் அவர் இலங்கை சென்று ஒரு கடையில் பணியில் சேர வேண்டிய நெருக்கடி நேர்ந்தது. பதினான்கு வயதில் பண்டிதமணியின் தந்தை காலமானார். அதே ஆண்டில் அவரது இடது காலும்,இடது கையும் வலுக்குறைந்தன. திருமணம் தள்ளிக்கொண்டே போய்
32-வது வயதில்தான் நிகழ்ந்தது.





இடையில் பீமகவி என்பவர் பண்டிதமணி மீது வழக்குத் தொடர்ந்தார். முதுமையில் மனைவி உயிர் நீத்தார். இவ்வளவு துன்பங்கள் வாழ்வில் அணிவகுத்து வந்தும், அவற்றால் சிறிதும் நிலைகுலைந்து, நெஞ்சம் துவண்டு விடவில்லை அவர். உள்ள உறுதியால் தமது உடற் குறையை வென்றார். தன் முயற்சியால் தமிழும்,வடமொழியும் கற்றார்.
"பண்டிதமணி",
"முதுபெரும் புலவர்",
"சைவ சித்தாந்த வித்தகர்",
"மகாமகோபாத்தியாய"
ஆகிய மிக உயரிய பட்டங்களைத் தம் வாழ்நாள் பணிகளுக்காகப் பெற்றார். இவ்வளவு உயர்வுகளுக்கும் காரணம் அவரிடம் குடிகொண்டிருந்த ஆளுமைப் பண்பே ஆகும்.

"இளம்பிள்ளை வாதத்தால் இருந்தது, அந்த
ஒண்டமிழ்ப் புலவர்க்கு ஒருகால் ஊனம்; இல்லை-
ஒண்டமிழ்ப் புலமையில் ஒருகாலும் ஊனம்!
வடமொழியும் வண்ணத் தமிழும் வீற்றிருந்தன விரல் நுனியில்
நற்கருத்தும் நகைச்சுவையும் குமிழியிட்டிருந்தன குரல் நுனியில்!"


என்று கவிஞர் வாலி, பண்டிதமணி பற்றிக் குறிப்பிடுவது இங்கே மனங்கொள்ளத்தக்கது.

பண்டிதமணிக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. அவரது சொற்பொழிவுகளிலும், தனிப்பட்ட உரையாடல்களிலும் நயமும் நகைச்சுவையும் இழையோடும். நடக்க முடியாத சூழ்நிலையில் இருந்ததால், வீட்டில் இருந்துகொண்டே படித்தார்.

பண்டிதமணி இலக்கியச் சுவையில் நயங்காணும் புதிய உத்திகளைக் கண்டவர்கள்:-

உ.வே.சா. "பதிப்புத் தந்தை" எனவும்,
மறைமலையடிகளை "உரைநடைத் தந்தை" எனவும்,
பண்டிதமணியை "தமிழ்நயத் தந்தை" என்றும் நாடு பாராட்டியது எனக் குறிப்பிடுகிறார் அறிஞர் வ.சுப.மாணிக்கம்.

பீடும் பெருமிதமும் வாய்ந்த புலமை வாழ்க்கையை நடத்தியவர் பண்டிதமணி. தம் கூரிய அறிவுத் திறத்தாலும் சீரிய அகக்கண்ணாலும் உயர்நிலைப் பாவலர் மயர்வற ஆக்கிய விழுப்பொருள் நிறைந்த செய்யுட்களில் சமயக் கட்டுரையில், இலக்கியக் கட்டுரையில், திருவாசக உரையில் என ஒல்லும் வகையெல்லாம் கண்டு உணர்ந்த நயங்களும் நுண்பொருள்களும் மிகப் பலவாகும். இவை முன்னர் யாராலும் காணப்படாதவை, அருமையும் அழகும் வாய்ந்தவை, உலப்பிலா இன்ப விளைவிற்கு ஏற்றவை.

ஒரு சான்று:

யாரும் இல்லைத் தானே கள்வன்;
தான்அது பொய்ப்பின் யான்எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான் (குறுந்தொகை-25)

என்பது புகழ்பெற்ற குறுந்தொகைப் பாடல்.

தலைவியை வரைந்து கொள்ளாமல் களவொழுக்கத்தை நீட்டித்துச் செல்லும் தலைவனின் இயல்பினைக் குறித்துத் தலைவி தோழியிடம் வருந்திக் கூறுவதாக அமைந்தது இப்பாடல்.

"தோழி, தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் சான்றாவார் வேறு ஒருவரும் இலர். தலைவன் ஒருவனே இருந்தான். அவனே தான் கூறிய சூளுறவினின்றும் தப்பி ஒழுகுவானாயின் நான் யாது செய்ய வல்லேன்? அவ்விடத்து அச்சமயம் ஒரு நாரை மாத்திரம் இருந்தது. அதுவும் ஓடும் நீரில் தான் உண்ணும் பொருட்டு ஆரல் மீனின் வரவை எதிர்பார்த்து நின்றதாகலின், எம் நிகழ்ச்சியைக் கண்ணுற்றிராது," என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.
இதற்குப் பண்டிதமணி கூறும் விளக்கம் பிற உரைகளினின்றும் வேறுபட்டது. வேறுபட்டது மட்டுமன்றி மேம்பட்டது என்பதும் பொருந்துவதேயாகும். நயமான அவ்விளக்கம் வருமாறு:

தோழியை நோக்கி, "தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் ஒரு நாரை மாத்திரம் இருந்தது. அதுவும் ஓடும் நீரில் தானுண்ணும் பொருட்டு ஆரல் மீனின் வரவை எதிர்பார்த்து நின்றதாகலின், எம் நிகழ்ச்சியைக் கண்ணுற்றிராது. காணாத ஒன்றைப் பற்றிச் சான்றாதற்குத் தமிழ் நிலத்துப் புள்ளும் ஒருப்படாது, வாய்மை நெறியொழுகும் இயல்பினதாகலின்," என்று தலைவி கூறினாளாம். "தமிழ் நிலத்துப் புள்ளும் வாய்மை நெறி ஒழுகும் இயல்பினது ஆதலின் காணாத ஒன்றைப் பற்றிச் சான்றாதற்கு ஒருப்படாது" என்னும் பண்டிதமணியின் விளக்கம் வியந்து போற்றுவதற்கு உரியது.

நெஞ்சம் உரத்தோடும்,நேர்மைத் திறத்தோடும் எவருக்கும் அஞ்சாமல் தம் மனத்திற்குச் சரியென்று படுவதை எடுத்துரைப்பது அவரிடம் காணப்பெற்ற சிறப்பு இயல்பாகும். இருபதாம் நூற்றாண்டில் தம் பழுத்த புலமைத் திறத்தால் தமிழ் மொழியைப் பல்லாற்றானும் வளர்த்த பெருமை பண்டிதமணிக்கு உண்டு.

உரைநடை,
கவிதை,
உரை,
மொழிபெயர்ப்பு,
ஒப்பீடு,
சொற்பொழிவு,
கல்வி

என்றாற்போல் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த பல்துறை வித்தகராக விளங்கினார்.

மண்ணியல் சிறுதேர்,
சுலோசனை,
கெளடலீயம்,
சுக்கிரநீதி


போன்ற வடமொழிப் பெருநூல்களை அழகிய முறையில் மொழிபெயர்த்து அப்பர் பெருமான் "உழவாரப்பணி" செய்ததுபோல் தமிழாரப்பணி செய்தவர் பண்டிதமணி. தமிழை உயிராகவும், சைவத்தைக் கண்களாகவும் போற்றிய பெருந்தகையாளர் அவர்.

"கதிர்மணி விளக்கம்" என்ற தலைப்பில் பண்டிதமணி திருவாசகத்துக்கு எழுதிய பேருரையைப் பாராட்டாத தமிழறிஞர்களே இல்லை எனலாம். "தமிழ்ஞாயிறு" எனச் சான்றோர்களால் போற்றப்பெறும் அவர், தமது பல்துறைப் பணிகளால் என்றென்றும் நிலைபெற்று விளங்குவார் என்பது திண்ணம். இவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் "மகிபாலன்பட்டி" என்ற சிற்றூரில் இவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முனைவர் நிர்மலா மோகன்

நன்றி:-தமிழ்மணி (தினமணி)

மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

சிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைகிறது!

1 மறுமொழிகள்
வியாழக்கிழமை, ஜூலை 10, 2008

திருச்சி: சிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆசிய மொழிகளின் பண்பாட்டு துறைப் பேராசிரியர் ஆ.ரா. சிவக்குமாரன்.

திருச்சி தேசியக் கல்லூரியில் தத்துவப் பேரவை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் அவர் பேசியது:

"உலக வரைபடத்தில் சிங்கப்பூர் ஒரு சிறு புள்ளிபோல் காட்சியளித்தாலும், உலக நாடுகள் மத்தியில் அனைத்து துறைகளிலும் உயர்ந்து பெரும் புள்ளியாகவே உள்ளது.

சிங்கப்பூரின் அபார வளர்ச்சிக்கான காரணத்தில் முக்கியமானது அரசியல் பின்னணி, மக்களின் கடின உழைப்பு, சரியான சட்டங்கள்தான்.

சிங்கப்பூரில் இயற்கை வளங்கள் கிடையாது. தண்ணீர் கூட மலேசியாவில் இருந்துதான் விலைக்கு வாங்கப்படுகிறது. ஆனால், அதே தண்ணீரை சுத்தம் செய்து மலேசியாவுக்கே திரும்பி விற்கின்றனர்.

சிங்கப்பூரில் 77 சதவிகித சீனர்களும், 14 சதவிகித மலாய்களும், 8 சதவிகித இந்தியர்களும் உள்ளனர். 8 சதவிகித இந்தியர்களில் 65 சதம் பேர் தமிழர்கள்.

தமிழையும் ஆட்சி மொழியாகக் கொண்ட சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு பல்வேறு வசதிகளை அங்குள்ள அரசு செய்து வருகிறது.

ஆனால், அங்குள்ள தமிழர்கள் தமிழ் மொழியைப் பேசினால் ஏதோ தரம் குறைந்தவர்கள் என்ற நிலைக்கு தள்ளப்படுவதால், ஆங்கிலத்திலேயே பேசி வருகின்றனர். குழந்தைகளும் வீட்டில் ஆங்கிலத்தில் பேசி வருவதால் எதிர்காலத்தில் தமிழ்மொழி வழக்கற்றுப் போகும் நிலை உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழை தெளிவாக பேச குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். தமிழில் பேச கூச்சப்படுவதால் வாய்மொழித் தேர்வில் அவர்கள் குறைவான மதிப்பெண்களையே பெறுகின்றனர்.

தமிழ் பண்பாடு சிங்கப்பூரில் தமிழ்நாட்டைப்போல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள செண்பகவிநாயகர் கோயிலில் ஞாயிறு பள்ளி நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு தமிழும், சைவமும் கற்பிக்கப்படுகிறது.

சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்கு அடிப்படைக் காரணமே, அங்குள்ள மக்கள் சட்டத்தை மதிப்பதுதான். சட்டத்தை மதிக்காதவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது.

ஒருமுறை தவறு செய்தவர்கள், மறுமுறை தவறு செய்யும் போது தண்டனை மேலும் அதிகரிக்கப்படும். சாதாரன குடிமகன் முதல் அரசு பதவிகளில் இருப்பவர்கள் வரை யாருக்கும் பாகுபாடு கிடையாது. அனைவருக்கும் தண்டனை ஒன்றே.

தமிழகத்தைப் போல் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களிடையே ஜாதிப் பிரிவுகள் கிடையாது. பெரும்பாலான திருமணங்கள் கலப்பு திருமணங்களே. ஜாதியால் தனித்து இயங்கும் நிலை இல்லை.

தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து வழங்கியது போல் தற்போது ஹிந்திக்கும் ஆட்சி மொழி அந்தஸ்து கேட்டு வருகின்றனர். இதனால் தமிழ் மொழிக்கான அரசின் சலுகை ஏதும் குறைந்து விடப்வதில்லை.

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற தமிழாசிரியர்கள் தற்போது கோடீஸ்வரர்களாக உள்ளனர். மொழி, கலாசாரம், பண்பாடு என அரசு எதற்கும் வேறுபாடு காட்டுவது கிடையாது' என்றார் சிவக்குமாரன்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கே. அன்பரசு, தத்துவப் பேரவை துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source: ThatsTamil

மின்தமிழ் இடுகை: நாக.இளங்கோவன்

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES